Wednesday, January 27, 2010

தமிழுக்கு ஏற்றம் தரும் விழா - 6

இராப்பத்து ( திருவாய்மொழித் திருநாள்)

இராப்பத்து வைகுண்ட ஏகாதசியன்று தொடங்குகின்றது. இந்த பத்து நாட்களிலும் இரவில் பெருமாள் திராவிட வேதமாம், வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபனின் திருவாய்மொழி பாசுரங்கள் கேட்டருளுகின்றார்.

சத்யநராயணப் பெருமாள்
காளிங்க நர்த்தன கோலம்


இந்தப் பத்து நாளும் இரவு நேரக் கோலாகலங்கள்! பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் தினமும் ஒய்யாளி, சிம்மநடை, காவடி சிந்து, என்று பல்வேறு நடைகளில் திருவீதி உலா வந்து பரமபத வாசல் வழியாக நம்மாழ்வாருக்கு சேவை சாதித்து நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாசுரங்கள் மட்டுமே பத்து நாட்களும் கேட்டருளுகின்றார்! நூறு நூறு பாசுரங்களாக பத்து நாட்கள் விண்ணப்பிக்கப்படுகின்றன.

நம்மாழ்வார்
பிறந்த காலம் - 7 ம் நூற்றாண்டு(765 - 800)
ஆண்டு - பிரமதி
மாதம் - வைகாசி
நட்சத்திரம் - விசாகம் (வெள்ளிக் கிழமை)
அம்சம் - சேணைத்தலைவர் (விஸ்வக் சேனர்)



சத்யநாராயணப் பெருமாள்
திருவேங்கடமுடையான் திருக்கோலம்


அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறைமார்பா
நிகர் இல் புகழாய் உலகம் மூன்றுடையாய் என்னை ஆள்வானே
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே
புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே




வடக்கில் இருந்த மதுரகவியாழ்வார் தெற்கு நோக்கி வந்து பதினாறு ஆண்டுகளாக ஏதும் பேசாமல், நகராமல், உறங்காப்புளியில் மோன தவம் செய்த மாறனிடம், கேட்ட புதிர் என்னவென்றால்,

செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால்,
எதைத் தின்று? எங்கே கிடக்கும்?


இக்கேள்வியைக் கேட்டவுடன், ஞானக் கொழுந்தான நம்மாழ்வார், முதன் முறையாகத் தன் திருவாய் திறந்து, விடை பகன்றார்.

அவருரைத்த பதிலாவது,

அத்தைத் தின்று; அங்கே கிடக்கும்.

அதாவது, செத்தது என்பது நம் உடல்; சிறியது என்பது உயிர். உயிரானது உடலினுள் இருக்கும் பொழுது அதற்கென்று தனியான இன்பம், துன்பம் எதுவும் கிடையாது. உடல் நொந்தால், உயிரும் நோகும்; உடல் இன்புற்றால், உயிரும் அப்படியே இன்புறும். அதனால், உயிரானது உடலின் இன்ப, துன்பங்களைத் தின்று, அங்கேயே இருக்கும்.

என்று, அந்த உயிர் உண்மையை(தன்னிலை அறிதல்) உணர்கிறதோ, அன்று அது இறைவனைப் பற்றிய எண்ணங்களையே உணவாக உண்டு, அவரது திருவடி நிழலிலே நீங்கா நிலைத்துவிடும்.


திருமயிலை ஆதி கேசவப்பெருமாள்
முத்தங்கி சேவை

நம்மாழ்வார்தான் இருந்த இடத்தை விட்டு எங்கேயுமே போனதில்லையே. பின்னர் எப்படி பாசுரங்கள எல்லாம் பாடினாரு? பாசுரக்கள், எம்பெருமானின் 108 திவ்ய தேசங்கள பத்தினதாச்சே!

எம்பிரானின் அவதாரம் தானே நம்மாழ்வார், அவருக்கே அவர் இருக்கின்ற இடங்கள் எல்லாம் தெரியாதா, என்ன? நம்மாழ்வார், திருவாய் திறந்து பாசுரங்களை எல்லாம் பாடத்துவங்கின போது, மகாவிஷ்ணு, அன்னை லெட்சுமி தேவியுடன், தன் கருட வாகனத்தில் சேவை சாதித்தார். அது மட்டுமல்லாமல், திருமாலின் திவ்ய தேசங்கள் அனைத்தும் அவர் மனக்கண்ணில் தோன்றின. அவைகளை மங்களாசாசனம் செய்தார் நம்மாழ்வார்.

திருமயிலை ஆதி கேசவப்பெருமாள்
முத்தங்கி சேவை பின்னழகு


நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் 1000 க்கும் மேற்பட்ட (1102) பாடல்கள் நம்மாழ்வாரால் பாடப்பெற்றவை ஆகும். அவரது திருமொழிகள் மொத்தம் 4 ஆகும். அவை,

திருவிருத்தம் - இது 100 பாசுரங்களைக் கொண்டுள்ளது. இந்நூலில், அவர் ரிக் வேதத்தினுடைய சாராம்சங்களை அமைத்துள்ளார்.

திருவாசிரியம் - இந்நூல் மிகக் குறைவான பாடலைக் கொண்டுள்ளது. அதாவது 7 பாடல்கள் உள்ளன. இதில் யசூர் வேதத்தின் அம்சங்களைக் கொடுத்தருளியிருக்கிறார்.

பெரிய திருவந்தாதி - இதில் 87 பாடல்கள் உள்ளன. இப்பாடல்களில் அதர்வண வேதத்தின் கருத்துகளை ருசிக்கலாம்.

விருத்தம், ஆசிரியம், அந்தாதி ஆகிய மூன்றும், ஒரு வகையான செய்யுள் ஆகும். அவை இறைவனின் பெயரில் பாடப்பெற்றவையால், அவற்றிற்கு திரு என்னும் அடைமொழி சேர்த்து திருவிருத்தம், திருவாசிரியம், திருவந்தாதி என்று அழைக்கப்படுகின்றன.

திருவாய்மொழி - இதில் 1102 பாடல்கள் உள்ளன. இவற்றில் சாம வேதத்தின் சங்கதிகளை சுவைக்கலாம்.


சத்யநாராயணப் பெருமாள்
முத்தங்கி திருக்கோலம்


இவ்வாறு, ரிக், யஜூர், சாம, அதர்வண என்னும் 4 வேதத்தினையும், தமிழில் படைத்து, தமிழ் மக்களும் வேதத்தின் அர்த்தங்களைப் புரிந்து அதன் பலனை அடைய அருளிச்செய்ததினால், நம்மாழ்வார, 'வேதம் தமிழ் செய்த மாறன்' என்று அழைக்கப்படுகின்றார். இவரது பாடல்கள் அனைத்திலும் வேதத்தின் சாரம் செறிந்து இருப்பதை, அவரது பாடல்களை உளமார ஓதும் வேளையில் உணரலாம். இவர், இறைவனை தலைவனாகவும், தன்னை தலைவியாகவும் பாவித்து பாசுரங்கள் பாடினார்.

பார்த்தசாரதிப்பெருமாள்
கோவர்த்தன கிருஷ்ணர் திருக்கோலம்




பார்த்தசாரதிப்பெருமாள் பின்னழகு

இராப்பத்தின் இறுதி நாள் நம்மாழ்வார் மோட்சம் என்றழைக்கப்படும் நம்மாழ்வார் திருவடி தொழும் உற்சவம். என்று வெகு சிறப்பாக தமிழுக்கு தகமை சேர்க்கும் இவ்விழா விஷ்ணுவாலயங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. 21ம்நாள் இயற்பா சேவிக்கப்படுகின்றது. இப்பதிவில் உள்ள பெருமாளின் திருக்கோலங்கள் இவ்வருட இராப்பத்தின் போது பெருமாள் அளித்த அருட்கோலங்கள்.

பூவையும் காயவும் நீலமும் பூக்கின்ற
காவிமலர் என்றும் காண்தோறும்_பாவியேன்
மெல்லாவி மெய்ம்மிகவே பூரிக்கும் அவ்வவை
எல்லாம் பிரான் உருவே என்று

காயாம்பூ, கரு நெய்தல், செங்கழுநீர் போன்ற மலர்களைக் காணும் போதெல்லாம் மனம் மகிழ்ந்து பூரித்து திருமாலின் வடிவங்களாய்த் தோன்றுவதாய்ப் சொல்லுகின்றது நம்மாழ்வார் பாசுரம் .

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்

Monday, January 25, 2010

தமிழுக்கு ஏற்றம் தரும் விழா - 5

வைகுண்ட ஏகாதசி சேவைகள்

கருமாரி திரிபுர சுந்தரி ஆலயம்
ஸ்ரீநிவாசர் அரங்கநாதர் திருக்கோலம்

( மாலை நம்பெருமாள் அணியும் மாலை போலவே)



காயத்ரியைக் காட்டிலும் சிறந்த மந்திரம் இல்லை. தாயை விஞ்சிய தெய்வம் இல்லை. காசியை விஞ்சிய புண்ணிய தீர்த்தம் இல்லை. ஏகாதசியை விஞ்சிய வேறு விரதமும் இல்லை என்பது முன்னோர் வாக்கு. தீட்டுக்காலத்தில் கூட ஏகாதசி விரதம் மேற்கொண்டால் பயன் உண்டு.

ஏகாதசி பதினைந்து நாட்கள் கொண்ட ஒரு காலப்பகுதியில்( பக்ஷம்) பதினொன்றாவது நாளாகும். கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, மனம் ஆகிய இந்த பதினோரு இந்திரியங்களால் செய்யப்படும் தீவினைகள் எல்லாம் இந்த பதினோராவது திதியில் ஏகாதசி விரதம் இருந்தால் அழிந்துவிடுவது உறுதி என்பர் முன்னோர்.

ஏகாதசி திதியின் உரிய தேவதை தர்ம தேவதை ஆகும். ஆகவே தர்ம திதியாகிய ஏகாதசி விரதத்தை தவறாமல் கடைபிடித்தால் தர்மத்திற்கு வளர்ச்சி ஏற்படும். தர்மத்தைக் காப்பாற்ற யுகம் யுகமாக அவதாரம் செய்யும் இறைவனுக்கும் மகிழ்ச்சி ஏற்படும்.

திருமயிலை ஆதி கேசவப் பெருமாள்
வெள்ளி கருடசேவை

( பெருமாள் வஜ்ர அங்கியில் அருள் பாலிக்கின்றார்)
ஏகாதசிகளுள் சிறந்தது மார்கழி மாத சுக்ல பக்ஷ ஏகாதசி ஆகும். இது வைகுண்ட ஏகாதசி என்றும் முக்கோடி ஏகாதசி என்றும் மோக்ஷ ஏகாதசி என்றும் அழைக்கப்படுகின்றது. இது மூன்று கோடி ஏகாதசிகளுக்கு சமம் என்பதால் முக்கோடி ஏகாதசி.
திருமால் தேவர்களின் வேண்டுகோளை ஏற்று முரன் என்னும் அரக்கனை அழிக்க சென்றார். பல வருடங்கள் அவனுடன் போரிட்டும் அவனை எளிதாக அழிக்க முடியவில்லை எனவே பெருமாள் பத்ரிகாச்ரமம் சென்று அங்கு ஒரு குகையில் படுத்துக் கொண்டார். திருமாலைத் தேடி வந்த அசுரன் அவர் நித்திரையில் இருப்பதை கண்டு அவரை தாக்கத் தொடங்கினார். அப்போது பெருமாளின் திருமேனியிலிருந்து ஒரு மகத்தான சக்தி ( தேவி ஸ்வரூபம்) தோன்றி அந்த அசுரனை மாய்த்தது.
இதனால் மகிழ்ந்த எம்பெருமான் அவள் வேண்டிய வண்ணம் அவளுக்கு ஏகாதசி என்னும் நாமம் விளங்கும் என்றும். ஏகாதசி அன்று விரதமிருந்து பெருமாளை எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பவர்கள் இம்மையிலும், மறுமையிலும் நல்லவனற்றையே அருளுவதாக வரம் கொடுத்தார்.
ஏகாதசி விரதம், இம்மையில் நிலைத்த புகழ், நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு முதலியவற்றை அளிப்பதோடு மறுமையில் பேரின்பத்தையும் அருளும் என்பது உறுதி.
ஆதிகேசவர் வெள்ளி கருடசேவை
இந்த மகத்தான விரதத்தை பின்பற்ற சில இன்றியமையாத விதிமுறைகளை முன்னோர்கள் வகுத்துள்ளனர். அவை தவம், தானம், புலனடக்கம் என்று மூன்று வகைப்படும். புலனடக்கத்தின் அடிப்படையாக இருப்பது உணவுக்கட்டுப்பாடு, எனவேதான் ஏகாதசி நன்னாளில் முழுமையான உண்ணாவிரதத்தை முக்கியமாகக் கொண்டனர்.
ஆகவே அமைதியாக தியானத்தில் அமர்ந்து எப்போதும் இறைவன் திருநாமத்தை ஸ்மரணம் செய்து கொண்டிருக்கலாம். இதனால் உடலும் உள்ளமும் தூய்மை அடைந்து பக்குவபப்டுகின்றது. எனவே இவ்விரதத்தை கடைப்பிடிப்பவர் தவம் செய்ய தகுதி உடையவர் ஆகின்றார்.
அல்லும் பகலும் அனவரதமும் இறைவனைப் பற்றி நினைத்தல், அவரின் இனிமையான திருநாமங்களை நா இனிக்கக் கூறுதல், அவர் எழுந்தருளி அருள் பாலிக்கும் கோவில்களிலோ அல்லது தங்கள் தங்கள் இல்லங்களிலேயோ ஆடி ஆடி அகம் கரைந்து, இசைப் பாடி பாடி கண்ணீர் மல்கி அவரிடம் நம் மனம், மொழி, மெய்களை ஈடுபடுத்தவே விரதம் இருக்க வேண்டும்.
இவ்வாறு ஏகாதசி விரதம் இருந்த பின், இறைவனுக்கு நிவேதனம் செய்த உணவை உண்பதற்கு முன் அதை தகுந்த பெரியோர்களுக்கு முதலில் வழங்கி உண்ணச் செய்யும் துவாதசி பாரணையில் தானம் என்ற உயர்ந்த பண்பு விளங்குகின்றது.
ஆதிகேசவர் வஜ்ர அங்கி பின்னழகு

இனி ஏகாதசி விரத மகிமையைப் பற்றிக்காண்போமா? திருமாலின் அவதாரமான ஸ்ரீராமனே பங்குனி மாதத்தின் விஜயா என்னும் ஏகாதசி விரதம் இருந்து பின் கடலைக் கடந்து சென்று தசக்ரீவனை அழித்து இலங்கையை வென்றார் என்று புராணம் கூறுகின்றது. இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் சீதா தேவியின் அருளைப் பெறலாம்.
ஒரு வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருந்து, துவாதசிப்பாரணை முடித்த அம்பரீஷ மஹாராஜாவை தவத்தில் சிறந்த துர்வாச முனிவராலும் ஒன்றும் செய்ய முடியாதவாறு திருமாலில் சுதர்சன சக்கரம் காத்தது என்று பாகவத புராணம் கூறுகின்றது.
நுங்கம்பாக்கம் ஸ்ரீநிவாசப்பெருமாள்
கருட வாகன சேவை
திருக்குறுங்குடி என்ற தலத்தில் பாணர் குலத்தைச் சார்ந்த நம்பாடுவான் ஏகாதசி அன்று எம்பெருமானைப் பாடி தானும் உயர்வு பெற்றதோடு தன்னை அழிக்க வந்த பிரம்மராக்ஷனுக்கும் சாப விமோசனம் அளித்ததை கைசிக புராணம் கூறுகின்றது.
ருக்மாங்கதன் என்ற மாமன்னன் இந்த விரதத்தை தானும் கடைப்பிடித்து தன் நாட்டவரும் பின்பற்றுமாறு செய்ததால் அவன் பெற்ற பெரும் பயனை ருக்மாங்கத சரித்திரம் கூறுகின்றது.
பீமன் ஒர் ஆண்டு முழுவதும் இந்த விரதத்தை செய்ய முடியாத நிலையில் ஆனி மாத சுக்ல பக்ஷ ஏகாதசியாகிய நிர்ஜலா என்ற விரதத்தை மட்டுமே நிறைவேற்றி ஓர் ஆண்டின் முழுப்பயனையும் பெற்றதாக பத்மபுராணம் கூறுகின்றது.
பாற்கடலில் மந்தார மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் கொண்டு எம்பெருமான் அமுதம் கடைந்து எடுத்த ஒப்பற்ற நாள் வைகுண்ட ஏகாதசி ஆகும். குருக்ஷேத்திரப் போரில் பார்த்தனுக்கு கீதையை உபதேசித்த நாள் இந்நாள்தான்.


வைகுண்ட ஏகாதசி எல்லா விஷ்ணுவாலயங்களிலும் கொண்டாடப்பெற்றாலும், இதன் பெருமை மிகுதியாக விளங்குவது சோழ நாட்டு திருவரங்கத்தில்தான். ஏகாதசியின் முழுப்பயனையும் அடையும் வாய்ப்பு திருவரங்கத்தில் அமைந்திருந்தாலும் அதே அமைப்பை நம் முன்னோர்கள் நாம் எல்லோரும் உய்ய அனைத்து பெருமாள் ஆலயங்களிலும் அமைத்தனர்.
ஸ்ரீநிவாசப்பெருமாள் பின்னழகு
எம்பெருமானுடன் போராடித் தோற்று அவர் அருள் பெற்ற அரக்கர்கள் இருவர் தாம் பெற்ற வைகுண்ட இன்பத்தை , உலகில் உள்ள எல்லாரும் பெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தால் எம்பெருமானை நோக்கி வைகுண்ட ஏகாதசியன்று திருவரங்க வடக்கு வாசல் வழியாகத் தாங்கள் அர்ச்சாவதாரத்தில் வெளி வரும் போது தங்களை தரிசிப்பவர்களும், தங்களை பின் தொடர்ந்து வருபவர்களும் எத்தனை கொடியவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு முக்தி அருள வேண்டும் என்றும் வேண்டினார்கள். அதன் காரணமாகவே வைகுண்ட ஏகாதசியன்று பரமபதவாசல் வழியாக எம்பெருமான் பவனி வரும் பெருநிகழ்ச்சி ஏற்பட்டது

திருமயிலை மாதவப்பெருமாள் ஆலயம்
பரமபத வாசல்
பல வடிவங்களில் எம்பெருமான் அவதரித்து பலரையும் காத்தது போல, அர்ச்சாவதாரத்தில் தானே முக்தியடையும் ஒருவனாக நடித்து அவ்வாறு அடைபவன் தன் முக்தி பயணத்தில் என்னென்ன மாற்றங்களையும், வரவேற்புகளையும் பேரின்பத்தையும் பெறுவானோ, அவைகளை நிகழ்த்தி காட்டும் முறையில் பெருமாளின் வைகுண்ட ஏகாதசி புறப்பாடும் திருவுலாவும் விளங்குகின்றன. இப்பதிவில் அந்த சில புறப்பாடுகளைக் கண்டு களித்து தாங்களும் வைகுண்டப்பேறு அடைய வேண்டுகிறேன்.

தமிழுக்கு ஏற்றம் தரும் விழா - 4

இவ்வருட பகல் பத்து உற்சவத்தின் சில சேவைகள்

பாசுரங்கள் இருவகைப்படும் அவை இசைப்பா மற்றும் இயற்பா. இசைப்பா இசையுடன் பாடப்படக்கூடியவை. முதல் மற்றும் இரண்டாம் ஆயிரத் திருமொழிகள் மற்றும் நம்மாழ்வாரின் திருவாய்மொழிப்பாசுரங்கள் இசைப்பாவில் அடங்கும். மூன்றாம் ஆயிரம் இயற்பாவில் அடங்கும் இவை இயல்பாக சேவிக்கப்படுவதால் இயற்பா ஆயின.

கீதாச்சார்யனாக சத்ய நாராயணப் பெருமாள்


பார்த்தனும் ஸ்ரீ கிருஷ்ணனும்

கீதோபதேசக் கோலம்



பகல் பத்தின் போது பகலில் அதாவது மத்தியான வேளையில் பெருமாள் முன் முதல் மற்றும் இரண்டாம் நாளில் பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டு, பெரியாழ்வார்திருமொழியும், மூன்றாம் நாள் ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவை, நாச்சியார் திருமொழியும், நான்காம் நாள் குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழியும், ஐந்தாம் நாள் திருமழிசைப்பிரானின் திருச்சந்த விருத்தம், தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருமாலை, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாணாழ்வாரின் அமலனாதிபிரான், மதுரகவியாரின் கண்ணிநுண் சிறுத்தாம்பு ஆகிய பாசுரங்கள் சேவிக்கப்படுகின்றது. ஆறாம் நாள் முதல் பத்தாம் நாள் வரை திருமங்கை மன்னன் நம் கலியனின் பெரிய திருமொழி சேவிக்கப்படுகின்றது. பத்தாம் நாள் நாச்சியார் திருக்கோலத்தில் சாற்றுமறையின் போது ஆலி நாடனின் திருக்குறுந்தாண்டகமும், திருநெடுந்தாண்டகமும் கேட்டருளுகிறார் பெருமாள்.


சத்யநாராயணப் பெருமாள் நாச்சியார் கோலம்

சத்ய நாராயணப் பெருமாள் திருவரங்கத்தில் நம்பெருமாள் அணிவது போலவே கிரீடமும், மாலையும் கிளிகளும் அணிந்து சேவை சாதிப்பதை கண்டீர்களா?

அமரர்களுக்கு அருஞ்சுவை அமுதம் அளிக்க ஒரு முறை மோகினி அவதாரம் எடுத்தார் பெருமாள். இரண்டாவது முறை பஸ்மாசுரனிடமிருந்து சிவபெருமானைக் காப்பாற்றவும், மூன்றாம் முறை முரன் என்ற அசுரனை அளிக்கவும் மோகினி அவதாரம் எடுத்தார். இந்த மூன்றாம் முறை எடுத்த அவதாரத்தையே நாம் வைகுண்ட ஏகாதசிக்கு முன் நாள் பகல் பத்தின் நிறை நாள் நாம் விஷ்ணுவாலயங்களில் சேவிக்கின்றோம்.





ஆழ்வார் ஆச்சாரியர்கள்
More than a Blog Aggregator