Tuesday, December 25, 2007

இராப் பத்து ஆறாம் நாள்

ஸ்ரீ:


பார்த்தசாரதிப் பெருமாள் கோவர்த்தனகிரி கண்ணன் திருக்கோலம்


குரவை கோத்த குழகனை மணிவண்ணனை குடக்கூத்தனை

ஆயிரம் தமிழால் போற்றிய நம்மாழ்வார்



திருவாய்மொழித் திருநாளின் ஆறாம் இரவு பூவின் மேல் மாது வாழ் மார்பினான் மாதவன் மணி வண்ணன், கண்ணன் திருமுன், உண்ணுஞ் சோர்று பருகு நீர் தின்னும் வெற்றிலையு மெல்லாம் கண்ணன் என்று மாலும் வண் குருகூர் சடகோபன் நாமங்களாயிரமுடைய நம்பெருமானடி மேல் சொன்ன ஆயிரத்துள் " ஆறாம் பத்தின் நூறு பாசுரங்கள் சேவிக்கப்படுகின்றன. இந்த பத்தில் எம்பெருமானது பற்றப்பட வேண்டும் (சரண்யத்வம்) தன்மை கூறப்படுகின்றது என்பது பெரியோர்களின் அருளிச் செயல்.

அகலகில்லே னிறையுமென்று அலர்மேல் மங்கையுறை மார்பா!
நிகரில் புகழாய்! உலகம் மூன்றுடையாய்! என்னையாள்வானே!
நிகரிலமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!
புகலொன்றில்லா அடியேன் உன்னடிக்கீழ மர்ந்து புகுந்தேனே.

என்று திருவேங்கடத்தானை சரண் அடைந்த நம்மாழ்வாருக்கு பெருமாள் திருவிண்ணகரத்தில்

என்னபப்னெனக் காயிருளாய் என்னைப் பெற்றவளாய்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்
சேவை சாதித்ததை பாடுகின்றார் நம்மாழ்வார் இப்பத்தில்.



நம்மாழ்வாரை அவயவி என்று உடலாகவும், மற்ற ஆழ்வார்களை அவயங்கள் என்று கூறுகளாகவும் கருவது வைணவ மரபு. இந்த உருவத்தில் பூதத்தாழ்வார் தலையாகவும், பொய்கையாழ்வார் மற்றும் பேயாழ்வார் கண்களாகவும், பெரியாழ்வார் முகமாகவும், திருமழிசையாழ்வார் கழுத்தாகவும், குலசேகரப் பெருமாள் மற்றும் திருப்பாணாழ்வார் கைகளாகவும், தொண்டரடிப்பொடியாழ்வார் மார்பாகவும், திருமங்கையாழ்வார் கொழ்ப்பூழாகவும், மதுரகவியாழ்வார் பாதம் என்பதும் ஐதீகம்.



நம்மாழ்வார், திருவடி மேலுரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும் திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்தொன்றுமினே என்று அவர் கூறியபடி எம்பெருமான் பாதங்களில் ச்ரண் அடைவோமாக.

திருவல்லிக்கேணியில் இன்று பார்த்தசாரதிப் பெருமாள் திருவேங்கடமுடையான் திருக்கோலம். திருமயிலையிலும் திருவேங்கடமுடையான் திருக்கோலம்தான்.

No comments:

More than a Blog Aggregator